Tuesday, July 18, 2006

புதுப்பேட்டை

'கொக்கி குமார்' - பெயரிலேயே அந்த வன்முறை வாடை அடிக்கிறது.

ஒரு சாதாரண ரெளடியோட பையனின் வாழ்க்கை வரலாறு என்று அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடிவதில்லை. பள்ளி செல்லும் ஒரு பையனுடன் ஆரம்பமாகும் கதை இவ்வளவு வன்முறைகளுடன் தொடரும் என்று எதிர் பார்க்க முடியவில்லை ஆரம்பத்தில்.

ஒவ்வொரு காட்சியையும் விவரிக்க வேண்டியது திரைக்கதையே என்கிற லாஜிக்கை உடைத்துத் தள்ளி காமிரா மற்றும் முகபாவங்களில் விவரித்திருக்கிறார் இயக்குனர்.

திட£ரென்று தன் தாய் கழுத்தறுபட்டு கிடக்க, தன் அப்பாவை பார்த்து மிரண்டு அழுதல்... தன்னுடைய பரம எதிரியைக் கொல்லப் போகும் காட்சியில் சாதாரணமாக இருவரும் உட்கார்ந்து சாப்பிடுவது.... வில்லன் தன்னைத் தானே கொன்று விடுதல், வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் கதாநாயகனை பயமுறுத்தும் கட்சிப் பெருசுகள்... முதலிரவு முடிந்த மறுநாள் தன் Office!!! வந்து குதூகலத்துடன் பிதற்றுதல்... இங்கெல்லம் செல்வராகவன் தனியாகத் தெரிந்திருக்கிறார்.

இரண்டரை மணிநேர படம் என்றாலும் ஏதோ இரண்டு நாள் பார்த்த ஒரு உணர்வை அடைய வைத்திருக்கிறது திரைக்கதை. படத்தில் அவ்வளவு காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் சில நொடிப்பொழுது வந்து செல்வதால் இப்படி ஒரு ப்ரமை எற்படுகிறது.

மேலும் படம் முழுவதும் ஒரே வன்முறை வெறியாட்டங்கள் என்று ஒரு சாதாரண மனிதனை முகம் சுளிக்கவைப்பதால் படத்தின் ஜனரஞ்சக வெற்றி கேள்விக்குறி தான். ஆனால் ஒரு சாதாரண பையனை இப்படிக் கொடூரமாக மாற்றும் அவனுடைய உள் குணாதிசியங்களை எந்த வித கூச்சலும் இன்றி படம் பிடித்துக் காட்டியதற்காக செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் தகும். இந்த மாதிரி நிஜங்களை எந்த வித ஒளிவுமறைவின்றி காட்டும் படங்கள் நிறைய வரவேண்டும். இதுதான் சினிமாவை ஒரு நல்ல ஊடகமாக மாற்றும். இந்தப் படத்தின் வெற்றிதான் இந்த ட்ரெண்டை முடிவு செய்யும் என்று சொன்னால் அது மிகையாகாது.

பின்னணி இசையில் திகில் காட்சிகளை நிறைவாகவே செய்து சபாஷ் பெறுகிறார் இசையமைப்பாளர் யுவன். செல்வராகவனின் திரைக்கதைக்கு ஈடு கொடுத்திருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா.

முதல் பாதியில் தன் திரைக்கதையின் மூலம் ரசிகர்களைத் தன் வசம் வைத்த செல்வராகவன், இரண்டாம் பாதியில் அதைக் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு வித்தியாசமான கதாபாத்திரமேற்று இருக்கும் சினேகா செம்மையாக செய்திருக்கிறார். படத்தில் சோனியா அகர்வாலின் பாத்திரம் ஏன் வருகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. அரசியல்வாதியாக வரும் அழகம்பெருமால் அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு விஷப்பரீட்சை என்றே சொல்லலாம்.

No comments: