Tuesday, February 06, 2007

வல்லவன்

'வல்லவன்' - படமெல்லம் நன்றாகத்தான் ஆரம்பமாகிறது. ஏன் ஹீரோவிற்கு 'வல்லவன்' என்ற பெயர். அம்மா அப்பாவே அந்தப் பெயர்தான் வைத்தார்களோ? ஹீரோ அறிமுகம் ஆகும் பாடலுக்கு ஏன் அந்த 'பில்டப்' என்று தெரியவில்லை. சிம்பு 'மாஸ் ஹீரோ' முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தன்னை விட வயது மூத்த பெண்ணை காதலிப்பது என்ற ஒற்றை வரிக்கதையை எடுத்திருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணை 'மடக்க' அவர் கையாளும் விஷயங்கள் ரொம்பவும் அரதப் பழசு. நயன் தாரா "நான் உனக்குத்தான்" என்று சொல்வதில் சுரத்தையே சுத்தமாக இல்லை.

நடு நடுவே வரும் சந்தானம் மற்றும் அவர் நண்பர்களும், நயன் தாரா தரப்பில் வரும் நண்பர்களில் அந்த ஒருவனும் 'காமெடி' யில் அசத்தியிருக்கிறார்கள். நயன் தாராவிற்கு வயது குறைவான பையனை காதலிப்பது பிடிக்காது என்று முதலிலேயே சொல்லியிருந்தாலாவது படத்தில் ஒரு 'த்ரில்' இருந்திருக்கும். சிம்புவிற்கு வயது குறைவு என்று குட்டு உடையும் காட்சியில் ஏன் அப்படி ஒரு சொதப்பல்? யாரோ ஒருவன் சொல்லியிருப்பது போல் காட்டியிருக்கும் அந்தக் காட்சி அமைப்பு ரொம்பவே சொதப்பல். படம் முழுக்க ஒரே கத்தல். காது வலிக்கிறது
நயன் தாராவிற்குப் பார்க்கும் மாப்பிள்ளை 'இட்ஸ் ஆல்ரைட்' என்று சொல்வதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி தமிழ் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. படத்தில் பல காட்சிகள் ஏன் வருகின்றன என்றே தெரியவில்லை. சில காட்சிகளில் 'எடிட்' செய்யவில்லையோ என்று முதல் வரிசை ரசிகன் கூட முனுமுனுக்கிறான். படத்தில் ரீமாசென் மற்றும் சந்தியா வரும் காட்சிகளின் அவசியம் தெரியவில்லை.

பின்னணி இசையில் யுவன் கலக்கியிருந்தாலும் சில இடங்களில் 'ஓவர்டோஸ்' ஆகத் தெரிகிறது. எடிட்டிங் படுமோசம். ஒளிப்பதிவு அதற்குமேல். காமிராவை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். கடைசியாக வரும் அந்த 'யம்மாடி...' பாடலின் நடனம் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பாடலில் நடனம், இசை, காட்சியமைப்பு என்று எல்லாமே நன்றாக ஒன்று கூடி வந்திருக்கிறது. இயக்கம் படுமோசம். சிம்பு இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது என்று தெரிகிறது. படம் முழுவதும் உட்கார முடியாமல் ரசிகர்கள் நெளிவது தத்ரூபமாகத் தெரிகிறது. அதுவும் இரண்டாவது பாதியில் பொறுமையின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள் ரசிகர்கள். ரீமாசென்னிற்கு ஏன் அந்த மாதிரி ஒரு பாத்திரப் படைப்பு?!

மொத்த்த்தில் 'வல்லவன்' கொன்று விட்டான் ரசிகர்களை.

No comments: